பெளத்த சிங்கள மத தர்மத்தினை அவமதிக்கும் செயலை தெளஹீத் ஜமாத் இயக்கமே மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கம் உடனடியாக அகில இலங்கை தெளஹீத் ஜமாத் இயக்கத்தை தடை செய்து இஸ்லாமிய தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா பெளத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பொது பல சேனா பெளத்த அமைப்பினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம் மத விடயங்களையோ, அவர்களின் புனித நூலான திருக்குர் ஆனையோ நாம் ஒரு போதும் அவமதிக்கவில்லை. அதேபோல் ஏனைய மதத்தவர்களின் விடயங்களில் நாம் அநாவசியமாக தலையிடவுமில்லை.
ஆனால், முஸ்லிம் அமைப்பான தெளஹீத் ஜமாத் இயக்கமானது பெளத்த சாசனத்தையும், பெளத்த கலாசாரத்தினையும் அவமதித்தும் எமது பெண்களை மோசமாக விமர்சித்தும் கருத்துகளை பரப்பி மேடைகளிலும் பகிரங்கமாகப் பேசியுள்ளனர்.
இவை வீடியோ காணொளிகளாக பதிவு செய்யப்பட்டு எம்மிடம் உள்ளன. அவற்றினை உடனடியாக நாம் பாதுகாப்பு அமைச்சிற்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பியுள்ளோம்.
அவை தொடர்பில் முதலில் விசாரணைகளை நடாத்தி அகில இலங்கை தெளஹீத் ஜமாத் இயக்கத்தினை உடனடியாக தடை செய்ய வேண்டும். இலங்கையில் தீவிரவாத இயக்கமாக மட்டுமின்றி இந்தியாவின் தமிழ் நாட்டு தெளஹீத் ஜமாத் முஸ்லிம் இயக்கத்துடனும் இணைந்து தமது மதவாத தீவிரவாதக் கொள்கைகளை பரப்புகின்றனர்.
ஆயுதம் ஏந்தாது முஸ்லிம்களை மன ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி தீவிரவாதக் கொள்கைகளை பரப்புகின்றனர். இது சில காலங்களில் மிகப்பெரிய தீவிரவாத சக்தியாக மாறி நாட்டையே பயங்கரவாத பூமியாக மாற்றியமைத்து விடும்.
எனவே, அரசாங்கம் உடனடியாக அகில இலங்கை தெளஹீத் இயக்கத்தை தடை செய்து பெளத்த மக்களையும் எமது புனிதத் தன்மையினையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும், பெளத்த சாசனம் பொய்யானது எனவும் புத்தர் இறைவன் இல்லையெனவும் முஸ்லிம் அமைப்புகள் விமர்சிக்கின்றனர். பெளத்த மதமா அல்லது இஸ்லாமிய மா, பெளத்த சாசனமா அல்லது குர்-ஆனா சிறந்ததென்பது தொடர்பில் விவாதம் நடத்த நாம் தயார்.
தெளஹீத் ஜமாத் அமைப்பு தைரியமிருந்தால் எம்முடன் விவாதத்திற்கு வர வேண்டும். நாம் ஒரு போதும் எவருக்கும் அஞ்சவில்லை. அதேபோல் எவரையும் எந்த மத விடயங்களையும் அவமதிக்கவுமில்லை.
முஸ்லிம்கள் மீது தனிப்பட்ட ரீதியில் எமக்கு எவ்வித விரோதமும் இல்லை. ஆனால், சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் எம்மை சீண்டும் நோக்கத்தில் பெளத்த மதத்தையே கொச்சைப்படுத்துகின்றனர். இதனை பெளத்தர்கள் எவரும் பொறுத்து போகமாட்டார்கள்.
எனவே, இனிமேலும் இவ்முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயற்பட இடம் கொடுத்தால் நாட்டில் முஸ்லிம் மத மாற்றமும் பெளத்த மத அழிப்புமே இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
