Advertisement

Main Ad

கோடிக்கணக்கான தென்னாப்பிரிக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுகொண்டிருந்த விமானத்திலிருந்து சடலமும் கோடிக்கணக்கான பணமும் மீட்பு

ஜிம்பாப்வேயில் சரக்கு விமானம் ஒன்றில் கோடிக்கணக்கான தென்னாப்பிரிக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்த குறித்த சரக்கு விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அதிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக ஹராரேவிலிருந்து வெளியாகும் ‘தி ஹெரால்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் தென்னாப்பிரிக்காவின் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானவை என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான சரக்கை எடுத்துச்சென்ற விமானம் ஒன்று ஹராரேவில் நிறுத்தப்பட்டபோது, அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டதையடுத்து விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தில் உள்ள பணத்தை விடுவித்து தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பச் செய்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஃப்ளோரிடாவில் இருந்து இயங்கும் வெஸ்டர்ன் குளோபல் ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான குறித்த விமானம், ஜெர்மனியில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்தது. எரிபொருள் நிரப்பிக்கொள்வதற்காக ஹராரேவில் இறங்குவதற்கு அனுமதி கேட்டு, அங்கே இறங்கியதாக கூறப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments