Advertisement

Main Ad

கல்முனை பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் காணப்படும் முறுகலை தீர்த்து வைக்க நடவடிக்கை


கல்முனை பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பிரதேசத்திலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் காணப்படும் முறுகலை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என நகர் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


வரவு-செலவு திட்டத்தின் 2016 இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரச்சினைகள் தொடர்பில் இரு சமூகத்தினருடனும் கலந்துரையாட வேண்டும். அதன் பின்னர் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கமைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்தோடு இம்முறை வரவு-செலவு திட்டத்திள் கண்டி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் புற்று நோய் வைத்தியசாலைகளை நிறுவவும் நாடு முழுவதும் ஆயிரம் சிறுநீரக மத்திய நிலையங்களை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரியது.

விவசாயிகளுக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ள இரண்டரை ஏக்கருக்கான உற மாணியத்தை 5 ஏக்கருக்கானதாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கடந்த பத்து வருடங்களாக நாம் அரசாங்கத்தை அவதானித்துக் கொண்டே இருக்கிறோம். தற்போதைய அரசின் புதிய வரவுசெலவு மிகவும் மாறுபட்டதாக காணப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.