நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி தோட்ட மக்கள், 30.10.2015 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குறித்த தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த தோட்டத்தில் 7 உயிர்களைக் காவுகொண்ட மண்சரிவு நிகழ்ந்து ஒரு மாதமும் 10 நாட்களும் நிறைவடைந்துள்ளதுடன், மீரியாபெத்தவில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.
இவற்றையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் முகமாகவும் மழைக் காலங்களில் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழும் தமக்கு, அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் அமைத்துத் தருமாறும் கோரியே இக்கவனயீர்ப்பு போரட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர்.
குறித்த வீட்டுத்திட்டத்தில் இத்தோட்டத்தில் வசிக்கும் 120 குடும்பங்களில் 19 குடும்பங்களுக்கு மாத்திமே வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிறுவர்கள், பெண்கள் உட்பட எழுவர் பலியாகியிருந்தனர்.