பாகிஸ்தான் சுப்ப லீக் ருவென்ரி 20 கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.
கட்டாரில் உள்ள டோகாவில் நடைபெறும் இந்தத் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த அணிகளுக்கிடையே 24 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவின் போது வீடியோ மெசேஜ் மூலம் இந்தத் தொடரில் பங்கேற்பதை கெவின் பீற்றர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெப்ரவரி மாதம் நடக்க இருக்கும் பாகிஸ்தான் சுப்ப லீக்கில் பங்கேற்க இருக்கிறேன். போட்டி தொடங்குவதற்காக நான் காத்திருக்க முடியாது.
இது ஒரு அற்புதமான தொடராக செல்லும். வழக்கமான ருவென்ரி 20 தொடர் போல் ஏராளமான ரசிகர்கள் , ஏராளமான சிக்சர்கள், ஏராளமான விக்கெட்டுகள் என சிறப்பாக செல்லும். மிகச் சிறப்பான இந்தத் தொடரில் பங்கேற்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் ரசிகர்களாகிய உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கெவின் பீற்றர்சனுடன் மேற்கிந்தியாவின் கிறிஸ் கெய்ல், பொலார்ட் டிவைன் பிராவோ , சுனில் நரைன் ஆகியோரும் இந்தத் தொடரில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.