-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பரகஹகெல ஆயுர்வேத வைத்தியசாலை இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

ஆயுர்வேத வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி திருமதி. டாக்டர். சமதி றண்கொட்கெட்டாறா (னுச.ளுயஅயனாi சுயமெழவாபநனயசய) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எம்.சஃபீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் மாகாண சபை உறுப்பினருமான சந்திரதாச கலபதி, ஆயுர்வேத சுகாதார சேவை மாகாண ஆணையாளர் திருமதி. டாக்டர். ஆர். ஸ்ரீதர், அம்பாரை பிராந்திய சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் டாக்டர். திலக் ராஜபக்ஷ ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்த கொண்டனர்.
மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- “இறைவனின் அருட்கொடையாய் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அமைச்சினால் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கான சேவைகளை சாதி, மத பேதமின்றிச் செய்து வருகின்றேன். இந்த அமைச்சிற்குட்பட்ட எந்தவொரு விடயத்திலும், யாருக்கும் எந்தவித பாகுபாடும் காட்டப்படமாட்டாது. எந்தக் கிராம மக்களுக்கு எனது அமைச்சின் தேவை உள்ளதோ அங்கு எமது சேவைகள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்தார்.





