( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சர்வதேச சிறுவர் தொழிலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் சிறுவர் குழுத் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு இன்று(12) காரைதீவு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நாவிதன்வெளி சிறுவர் குழுத் தலைவி செல்வி.இராமநாதன் யளார்த்தனி தலைமையில் இடம் பெற்ற இவ்வூடக மாநாட்டில் கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர் பிரதேச சிறுவர் குழுக்களின் தலைவர்கள் ஊடகவியலாளர் மாநாட்டை முன்னின்று நடாத்தினர்.
உலக வராலாற்றிலேயே இவ்வாறு சிறுவர்களினால் நடாத்தப்பட்ட ஒரே ஒரு ஊடகவியலாளர் மாநாடு இதுவாகவே இருக்குமென பொது மக்கள் பேசிக் கொண்டனர்.
இம்மாநாட்டில் கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விஹாராதிபதி றன்முத்துகல சங்கரெத்தின தேனர், அம்பாரை மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஏ.உதுமாலெவ்வை, சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா, மனித அபிவிருத்;தி ஸ்தாபனததின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.சிறிகாந், இன்னும் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இச்சிறுவர் ஊடகவியலாளர் மாநாட்டில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு துஸ்பிரயோகங்கள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிறுவர்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள், இதற்கான காரணங்கள், சிறுவர்களின் கல்வி மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் விலாவாரியாக எடுத்துரைக்கப்பட்டன. இறுதியில் “ சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு உடனுக்குடன் அரசு தண்டணையை வழங்க வேண்டும். விசாரணை என்ற போர்வையில் காலம் தாழ்த்தப்படுவதால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கும், மேலும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உடனுக்குடன் தண்டணை வழங்கப்பட வேண்டும்” என்ற கருத்து உரத்து உச்சரிக்கப்பட்டது.
தழிழ்,சிங்கள மொழிகளில் மாநாடு இடம் பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.






