மலேசியாவின் எண்ணெய்க் கப்பலொன்று 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் காணாமற்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒர்கிம் ஹாமனி (Orkim Harmony) என்ற அந்தக் கப்பல், 75 இலட்சம் லிட்டர் பெட்ரோலுடன் மலேசியாவின் மலாக்கா நகரிலிருந்து, குவான்டன் நகருக்குச் சென்று கொண்டிருந்தது.
இதன்போது, மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அந்தக் கப்பலுடனான தொடர்பு கடந்த வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மலேசிய கடல் பாதுகாப்புத்துறை செயல் இயக்குநர் இப்ராஹிம் முகமது கூறியதாவது:
காணாமற்போன எண்ணெய்க் கப்பலில், 1.5 கோடி ரிங்கிட் மதிப்புடைய பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது. மாயமானபோது அந்தக் கப்பலில் 22 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேர் மலேசியர்கள்.
அந்தக் கப்பலைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஜோஹார் மாகாணத்தின் கோடா டிங்கி நகரிலிருந்து, மெர்ஸிங் நகர் வரையிலான 20,000 சதுர கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார் அவர்.
கடற்கொள்ளையர்களால் இந்தக் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் மலேசிய அதிகாரிகள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

