மீனோடைக்கட்டு - பைஷல் இஸ்மாயில், எ.எல்.எம்.நபார்தீன்
நகர
அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினூடாக அரசின் 100
நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்
பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்
திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்தரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (01)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை
பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர
அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இங்கு,
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை,
ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி ஆகிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய
செயற்றிட்டங்கள் தொடர்பாக பிரதித் திட்டப் பணிப்பாளர் ஐ.எல். தௌபீக்
தெளிவுபடுத்தினார்.
மேலும்,
குறித்த அமைச்சினூடாக இப்பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்
திட்டங்களாக மைதானங்களின் அழகுபடுத்தலும் புனரமைப்பும், கடற்கரைப்
பூங்காக்கள் அமைத்தல், ஆற்றங்கரை அழகுபடுத்தல், பிரதான பாதை விஸ்தரிப்பும்
நடை பாதையுடனான அலங்கரிப்பும், கரையோர அபிவிருத்தி, பூர்த்தி செய்ய வேண்டிய
நிலையிலுள்ள நீர் வழங்கல் திட்டங்கள், நீர் விநியோக நடவடிக்கைகளை
அதிகரிப்பதற்கான திட்டங்கள் போன்றன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்
அதிகாரிகளால் அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட
குறித்த இவ்வேலைத் திட்டங்களை துரிதமாக 100 நாட் திட்டத்தில்
முன்னெடுப்பதற்காக திட்ட வரைபுகளையும், உத்தேச செலவு மதிப்பீட்டினையும்,
அது தொடர்பான வரைபடங்களையும் மிக விரைவாக தயாரிப்பதற்கு அமைச்சர் ஹக்கீம்
பணிப்புரை விடுத்ததுடன் அதற்கான ஆலோசனைகளையம் வழங்கினார்.
இக்கலந்துரையாடலில்
பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், எச்.எம்.எம். ஹரீஸ், மாகாணசபை
உறுப்பினர்களான எம்.ஐ. எம். மன்சூர், ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை
பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில், உதவித் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா
உட்பட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினதும்
திணக்களங்களினதும் உயரதிகாரிகளும் உள்ளுர் அரசியல் பிரமுகர்களும்
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.










