அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல வறிய முஸ்லிம் கிராமங்களில் வாழும் அதிகளவான மக்கள் சுத்தமான குடிநீரினை பெற்றுக்கொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் உறவுகள், சொத்துக்களை இழந்து மாற்று இடங்களில் குடியேறிய இந்த மக்கள் இன்றும் அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அதன் தொடரில் குறிப்பிட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ் ஹாறூன் (ஸஹ்வி) மற்றும்; பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், கணக்காளர் ஏ.எல்.இஸ்ஸூதீன் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அம்மக்களின் தேவைகளையும்; குறைகளையும் கேட்டறிந்தனர்.
அதன் பயனாக நெய்ணாகாடு எனும் கிராமத்தில் உள்ள சுமார் 95 வறிய குடும்பங்களுக்கும், ஈரத்திடல் 5ம் கிராமம் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கும், சென்றல் கேம்ப் 4ம் கொலனியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கும் உடனடியாக நீர் இணைப்பினை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை அல்-கிம்மா நிறுவனம் செய்து தருவதாக வாக்குறுதியளித்து முதல் கட்ட வேளைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலுவலக செய்தியாளர்
எம்.ஐ.அஸ்பாக்

0 Comments