திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால் மேற்கொள்ளப்பட்ட முறையீடு, சவூதி அதிகாரிகளிடம் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்ததோடு, அரச, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், இத்தண்டனைக்கெதிரான தங்களது குரலை எழுப்பியிருந்தனர்.
இதில், இப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதை இலங்கை இடைநிறுத்த வேண்டுமென, பிரதியமைச்சர் அஜித் பி பிரேரா தெரிவித்திருந்தார்.
பெயர் குறிப்பிடப்படாத குறித்த பெண்ணுக்குக் கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரோடு தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கையருக்கு, 100 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.