( எஸ்.அஷ்ரப்கான் )
சாய்ந்தமருது மக்களின் தாகம் தனியான பிரதேச சபையாயின் அது பற்றி அரசாங்கம் சிந்திப்பதுடன் இதனை வென்றெடுப்பதற்கு சாய்ந்தமருது மக்கள் ஜனநாயக தேர்தலை பயன் படுத்த வேண்டும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
கல்முனைக்குடி மக்களுடன் ஒன்றாக இருந்த சாய்ந்தமருது மக்கள் மத்தியிலும், கல்முனை மக்கள் மத்தியிலும் பிரதேச வாதத்தை விதைத்து விட்டது முஸ்லிம் காங்கிரசாகும். அதிலும் கடந்த மாநகர சபை தேர்தலின் போது அதிக வாக்கை பெறுபவர் மேயராக நியமிகப்படுவார் என சாய்ந்தமருதிலும், எந்த நிலையிலும் நிசாம் காரியப்பரே மேயர் என கல்முனைக்குடி மக்களிடமும் முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து இந்த இரண்டு ஊர்களையும் மூட்டிவிட்டது. இதன் காரணமாக் சாய்ந்தமருது மக்கள் சிராஸ் பின்னாலும், கல்முனைக்குடி மக்கள் நிசாம் காரியப்பர் பின்னாலும் பிரதேச வாதத்தை வைத்து அள்ளுப்பட்டனர். அந்த தேர்தலில் போட்டியிட்ட
நாம் இவ்விரண்டு ஊர்களுக்கும் மிகத்தெளிவாக ஒன்றைசொன்னோம்.
முஸ்லிம் காங்கிரசின் இந்த ஏமாற்றுக்கு சோரம் போக வேண்டாம் என்றும் அக்கட்சியை நிராகரித்து எமக்கு வாக்களிப்பதன் மூலம் ஒற்றுமையை பலப்படுத்துவோம் என கூறினோம். ஆனாலும் வழமை போன்று முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று அரசியலுக்கு கல்முனை மக்களும், சாய்ந்தமருது மக்களும் பலியாகினர்.
அதன் பின் மேயர் தெரிவில் தமது வாக்கை மீறிய மு. கா தலைமை சிராசுக்கு இரண்டு வருடம் அப்பதவியை வழங்கி இரண்டு வருடத்தில் அவரிடமிருந்து பறித்ததன் மூலம் சாய்ந்தமருது மக்களின் ஜனநாயக உரிமையை பறித்தது.
எம்மை பொறுத்த வரை சிராசுடைய மேயர் பதவி காலத்தில் பாரிய ஊழல் நடைபெற்றதை அவ்வப்போது பகிரங்கமாக சுட்டிக்காட்டினோம். இது அவர் இணைந்திருந்த
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் முதல் நுணி வரை ஊழல் என்பதால் மக்கள் பொருட்படுத்தவில்லை. கடைசியில் அவரை மேயர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியமை சாய்ந்தமருது மக்களை தனிப்பிரதேச கோரிக்கையின் பால் அதிகம் செல்லவைக்கப்பட்டது. அதே போல் நிசாம் காரியப்பர் மேயராக நியமிக்கபட்டும் கல்முனை மக்கள் எந்த நன்மையை காணாமல் அவர்களின் புலம்பல்களே தினமும் ஊடகங்களில் காணப்படுகின்றன. ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரசால் கல்முனைக்குடி மக்களும் சாய்ந்தமருது மக்களும் ஏமாற்றப்பட்டனர். இந்த நிலையிலும் 2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் இந்த இரண்டு ஊராரும் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களித்ததன் மூலம் தாங்கள் இன்னமும் பாடம் படிக்கவில்லை என்பதையே தெளிவு படுத்தினர். அந்த தேர்தலிலாவது சய்ந்தமருது மக்கள் மு. காவை நிராகரித்து சாய்ந்தமருது மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொண்டுள்ள,
கல்முனைத்தலைமையிலான எமது கட்சிக்கு வாக்களித்திருந்தால் இந்நேரம் முஸ்லிம் காங்கிரஸ் விழுந்தடித்துக்கொண்டு சாய்ந்தமருது பிரதேச சபையை வென்று தந்திருப்பார்கள்.

