(ஜே.ஜீ.ஸ்டீபன், ப. பன்னீர்செல்வம்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
அந்தவகையில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களும் ஏகமனதாக தீர்மானித்து அறிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இதனை அறிவித்தார்.
இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றமும் அறிவித்துள்ள விடயத்தை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தும் உறுதிபடுத்தியுள்ளார்.
ஏறாவூரில் இன்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதியினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்க்கமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
