சவூதி அரேபியாவில் தொழில் புரிகின்ற இலங்கைப் பணிப் பெண்களை
வெளித்தரப்புடன் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று அந்த நாட்டின்
காவற்துறையினர் தொழில்தருனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அரப் நியூஸ்
இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தற்போது ரமழான் மாதம் என்பதால், சவூதியில் பணியாற்றுகின்ற இலங்கை பணிப்
பெண்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒப்பந்தகாரர்களின்
வீடுகளில் தப்பி வேறு இடங்களில் தொழிலுக்கு இணைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் இவ்வாறு வேறு இடங்களில் தொழிலில் இணைவதன் மூலம் சுமார் 2000
சவூதி ரியால்கள் வரையில் ஈட்டிக் கொள்ள முடியும் என்று
தெரிவிக்கப்படுகிறது.
எனவே இலங்கை பணிப் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கவோ, அல்லது
அவர்களை தனியாக வீட்டில் இருந்து வெளியில் செல்லவோ அனுமதிக்க வேண்டாம்
என்று காவற்துறையினர் கோரியுள்ளனர்.
மேலும் இவ்வாறான பெண்கள் தொடர்பில் சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும்,
கடவுச்சீட்டு காரியாலயத்துக்கும் அறிவித்திருப்பதாக காவற்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
