
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியையும் அதிலுள்ள
கட்டிடங்களையும் ஒரு குழுவினர் தங்களுக்கு சொந்தமானவையென உறுதி முடித்துள்ள
சம்பவம் அம்பலமானதும் ஒலுவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொது மக்கள்
அக்கரைப்பற்று பொலிஸில் புகார் செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது: ஒலுவில் பெரிய ஜும்ஆ
பள்ளிவாசலுக்குச் சொந்தமான பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள அல் மதரஸதுல்
இலாஹியா குர்ஆன் மத்ரஸாவும் அதிலுள்ள சகாத் சபை காரியாலயம் மற்றும்
கடைக்கட்டிடத் தொகுதிகளும் பல நூற்றாண்டுகளாக பள்ளிவாசலின் பராமரிப்பிலேயே
இருந்து வருகிறது.
இந்த நிலைமையில், குர்ஆன் மத்தரஸாவில் ஓதிக்கொடுப்பதற்கு நியமிக்கப்பட்ட
மெளலவியின் தலைமையில் ஒரு குழுவினர் அந்த இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து
அதனை பதிவு செய்துள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டு புதிய நிருவாக
சபை தெரிவு செய்யப்படாமல் நீண்டகாலமாக இருந்து வரும் இந்த நிலையிலேயே அல்
மத்ரஸதுல் இலாஹியா குர்ஆன் மத்ரஸாவையும் அதிலுள்ள கட்டிடத் தொகுதிகளையும்
ஒரு குழுவினர் தங்களுக்கு சொந்தமானவையென போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.
இதுவிடயமாக பொதுமக்கள் பொலிஸில் புகார் செய்துள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
