Advertisement

Main Ad

அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் எம்.பி.க்கள் - விமல்,சம்பிக்க, ரத்தின தேரர் எதிர்த்து வாக்களிப்பு

போதைப் பொருள் கடத்தல், பாவனை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை தடுப்பதற்காக அரசாங்கத்திற்கு இருக்கும் ஆற்றலில் நம்பிக்கையற்றிருப்பதாக சுட்டிக் காட்டி ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்தினால் 94 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 
பிரேரணையில் கொண்டு வந்த பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக்க ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவன்ச தலமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகியன இரண்டு நாள் விவாதங்களிலும் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதுடன் வாக்களிப்பின் போதும் சபையில் சமூகமளித்திருக்கவில்லை. 
பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் 94 மேலதிக வாக்குகளால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது 20 மற்றும் 21 ஆம் திகதிகள் என இரு தினங்களில் வாதவிவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று புதன் கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 
இதன்போது, ஆளும் கட்சியின் பல அமைச்சர்களும் எம்.பி க்களும் சமூகமளிகத்திருக்கவில்லை. 
இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, பிரதியமைச்சர்களான பைசர் முஸ்தபா, ஏ.ஆர்.ஏ. காதர், அமைச்சர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா, ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பிரபா கணேசன் எம்.பி, பி. இராஜதுரை எம்.பி, வி. இராதாகிருஷ்ணன் எம்.பி, பி. திகாம்பரம் எம்.பி உள்ளிட்டோர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். 
அத்துடன் எல்லாவல மேதானந்த தேரர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததுடன் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் எம்.பி ஆகியோர் சபையில் சமூமளித்திருக்கவில்லை. 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பைசல் காசிம், கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 
இதன்படி அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் கிடைக்கப் பெற்றதையடுத்து பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சபையில் அறிவித்தார். 
இதேவேளை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல மற்றும் துமிந்த சில்வா எம்.பி. ஆகியோர் பிரேரணையை ஆதரிப்பதாக கூறியதால் சபையில் பெரும் கூச்சல் எழுந்தது. பிறகு சுதாகரித்துக் கொண்டு எதிர்ப்பதாக கூறினார்.