Advertisement

Main Ad

கல்முனை மாநகர சபையில் அளுத்கம சம்பவத்திற்கு எதிராக கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

(எம்.வை.அமீர்)
அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித்தாக்குதலைக் கண்டித்து கல்முனை மாநாகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று (2014-06-25) கல்முனை மாநகர சபை ஸபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் தலைமையில் ஆரம்பமானது. 
முதற்கட்ட சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஏற்கனவே சபை நிகழ்வுகளில் குறிப்பட்டிருந்த அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித்தாக்குதலைக் கண்டிக்கும் தீர்மானத்தை முன்வைத்து முதல்வர் உரையாற்றினார். 
முதல்வர் தனது கண்டன உரையின் போது, 1983 ஜூலை கலவரத்தின் பிற்பாடு 2014 ஆண்டு ஜூனில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீதும் உடைமைகள் மற்றும் உயிர்கள் மீதும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர தாக்குதலை ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இந்த நாட்டின் பிரஜை என்ற முறையிலும் நாட்டை நேசிக்கின்ற தேசப்பற்றுள்ள பிரஜை என்ற முறையிலும் சிறுபான்மை தமிழ்பேசும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையிலும் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் அவர்களை நண்பர்களாக கொண்டு அவர்களின் பாசையில் அங்குள்ள பாடசாலையில் சரளமாக படித்தத்தவன் என்ற முறையிலும் மிகவும் வெட்கமான கேவலமான பௌத்த மதத்துக்கே அசிங்கமான தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான சம்பவத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், சட்டத்துக்கும் ஒழுங்குக்கும் பொறுப்பான ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்தசந்தர்ப்பம் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பொதுபல சேனா, சிகல ராவயவும் ஒன்றாக சேர்ந்து சட்டத்தை தங்களது கையில் எடுத்து இவ்வாறான கொடூர செயலை செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும் குறித்த கண்டன பிரரேணைக்கு சபையின் பூரண ஆதரவை கோரினார். 
குறித்த கண்டன பிரேரணை மீது உரையாற்றிய கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தனதுரையில், தங்களது கட்சி இவ்வாறான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறான இனச்சுத்திகரிப்பு நிலைகளை தான் சார்ந்த தமிழ் சமூகம் நிறையவே அனுபவித்ததால் இவ்வேதனையை உணர்ந்தவர்கள் என்ற வகையில் முதல்வரால் கொண்டுவரப்பட்டுள்ள இப்பிரரேனையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித்தாக்குதலைக் கண்டித்து சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி பேதமின்றி சகல உறுப்பினர்களும் கண்டன பிரரேணைக்கு ஆதரவாக உரையாற்றியதுடன் இறுதியில் சபையின் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உரையின் பிரதிகளை ஜனாதிபதி அமைச்சர்கள் வெளிநாட்டு ஸதானிகா் காரியாலயங்கள் நீதி வழங்கக்கூடிய சகலருக்கும் அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.