உயர்தரப் பரீட்சை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
இம்முறை பரீட்சையில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62 ஆயிரத்து 134 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 2 இலட்சத்து 96 ஆயிரத்து 331 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை பரீட்சார்த்திகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக தபாலில் சேர்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐந்தாம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கின்றார்.
இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக 3 இலட்சத்து 34 ஆயிரத்து 662 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
