Advertisement

Main Ad

ரவூப் ஹக்கீம், விமல் வீரவன்ச, தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் ஒரேமாதிரியானவையே - ஆஸாத் சாலி

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (21.05.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.

தற்போது அரசுக்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் நாம் சந்தித்த அமைச்சர்கள் அனைவரும் எம்மிடம் ஒரே விதமான கருத்துக்களைத் தான் முன்வைத்தனர். இந்தத் தீர்மானத்தை அரசுக்கு எதிராக முன்வைக்க வேண்டாம். ஆளும் குடும்பத்துக்கு எதிராக கொண்டுவருமாறு ஐ.தே.க வுக்கு ஆலோசனை கூறுங்கள். அப்படி குடும்பத்துக்கு எதிராகக் கொண்டு வரப்படுமானால் நிச்சயம் நாமும் ஏதாவது ஒரு வழியில் ஆதரவு வழங்கலாம். மாறாக அரசுக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்டால் நாம் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம் என்பதுதான் அவர்கள் எம்மிடம் தெரிவித்த கருத்தாக இருந்தது. இது எந்தளவுக்கு அரசுக்குள் இருக்கும் அமைச்சர்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர் என்பதையே புலப்படுத்துகின்றது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று நிகழ்த்திய உரையும் இதை தெளிவு படுத்துகின்றது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏன் அரசுக்கு எதிராகக் கொண்டு வர வேண்டும். அதை ஏன் வேறு வழிகளில் சமர்ப்பிக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசுக்கு எதிரான தீர்மானம் என்பது அமைச்சர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதால் தான் சில அமைச்சர்கள் இதற்கு ஆதரவு வழங்க தயங்குகின்றனர். மற்றபடி இந்த அரசுக்கு எதிராக ஒரு குழு அரசுக்குள்ளேயே செயற்படத் தொடங்கியுள்ளமை நன்கு புலனாகின்றது.

இந்த தீhமானத்தை ஆதரிக்கப் போதுமில்லை, எதிர்க்கப்பபோதும் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன முடிவு செய்துள்ளன. இது ஆணும் அற்ற பெண்ணும் அற்ற ஒரு நிலையாகும். ஒன்றில் ஆணாக இருக்க வேண்டும் அல்லது பெண்ணாக இருக்க வேண்டுமே தவிர இரண்டும் கெட்ட நிலையில் இருக்கக் கூடாது. அரசாங்கத்துக்குள் அநியாயம் மோசடி திருட்டு என்பன இடம் பெறுவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ பகிரங்கமாகக் கூறுகின்றார். மாகம்புர மகிந்த ராஜபக்ஷ துறைமுகம் தோற்றுப் போன ஒரு திட்டம் என தற்போது பகிரங்கமாக சாடுகின்றார். இது மக்களின் பணத்தை வீணடிக்கும் ஒரு செயல் என்று அவர் தற்போது கூறுகின்றார். ஆனால் நாங்கள் இதை ஆரம்பம் முதல் கூறி வருகின்றோம். இதில் வேடிக்கை என்னவென்றால் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகித்துக் கொண்டு அதற்கான சகல சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டுதான் அவர் தற்போது எதிர் கருத்துக்களையும் முன் வைக்கின்றார். இவர்கள் வாக்களிக்காவிட்டாலும் சரி ஜி.எல். பீரிஸ் அதையும் சாதகமாக்கி தனது ஜெனீவா கணித முறையை பயன்படுத்தி அரசு இந்த வாக்கெடுப்பில் அமோக வெற்றியீட்டியதாக அறிவிப்பார் என்பது நிச்சயம்.

இந்த நாட்டின் அதஉயர் மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி நேரடியாக ஒரு வாக்குறுதி அளித்தார். அதில் இந்த நாட்டில் கஷினோக்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று அவர் உறுதி அளித்தார். குறிப்பாக ஜேம்ஸ் பெக்கர் நிறுவவுள்ள ஹோட்டலில் கஷினோக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். ஆனால் இன்று அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல என்ன சொல்கின்றார். ஜேம்ஸ் பெக்கர் நிறுவவுள்ள ஹோட்லில் கஷினோ இடம்பெற்றால் அதை அரசு எதிர்க்காது.கண்டு கொள்ளாது என்று கூறுகின்றார். ஜேம்ஸ் பெக்கரின் உள்ளுர் பங்காளிகளுக்கு கஷினோ அனுமதிப் பத்திரம் இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தலாம் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமைச்சர் கெஹலிய புதிய விளக்கமளித்துள்ளார்.

அரசாங்கத்தின் முக்கிய பல அமைச்சர்கள் பலர் ஆங்காங்கே இரகசிய கூட்டங்களை நடத்தி அரசுக்கு எதிரான செயற்பாடுகள் பற்றியும்,இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் ஆலோசித்து வருகின்றனர். இது அரசுக்கு நன்றாகத் தெரியும். இதனால் அழகாக ஒரு நாடகத்தை எழுதி அதை அரங்கேற்றும் பொறுப்பை அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.அரசுக்குள் இருந்து கொண்டே எதிரணி ஒன்றை தோற்றுவிப்பதுதான் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு. இவர் தற்போது அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்களையும் ஏனையவர்களையும் ஒன்று திரட்டும் ஒரு பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் வெற்றியடைந்து அவர் அந்த அணியை உருவாக்கினால் அதைப் பயன்படுத்தி அதிருப்தியாளர்கள் வாக்குகளைத் திரட்டி தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அதை அரசுக்கு வழங்கி மகிந்த ராஜபக்ஷ அரசை தக்க வைப்பதுதான் இந்த நாடகம். அதன் பிரதான பாத்திரத்தை அமைச்சர் விமல் வீரவன்ஸ உட்பட மற்றவர்களும் ஏற்றுள்ளனர். இது சரியாக ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்யும் பணிக்கு சமனானதாகும்.

நேற்று முன்தினம் வரை அமைச்சர் ஹக்கீம் கூறிவந்தது என்ன? அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய காலம் வந்து விட்டதாக தான் உணருவதாகக் கூறிவந்தார். ஊடகங்களும் அவரின் இந்தக் கருத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்புச் செய்து வந்தன. ஆனால் அவர் இந்தக் கருத்தை எங்கு வைத்து கூறியுள்ளார் என்பதை சற்று தேடிப் பாருங்கள். அவர் இவ்வாறு கூறியது கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் மக்கள் மத்தியில் பேசும் போது. அவர் வழமையாக கிழக்கு மாகாணம் சென்றால் இப்படித்தான் பேசுவார். இது ஒன்றும் புதிய விடயம்; அல்ல. இதை நாம் பாரதூரமாக எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. அவர் நேற்று கொழும்பில் என்ன சொல்லி இருக்கின்றார் என்று பாருங்கள். ஐ.தே.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளமை பிழையான ஒரு செயல். அவர்கள் அரசியல் இலாபம் தேடப்பார்க்கின்றனர். நாம் இதற்கு அனுமதிக்க மாட்டோம். அரசை நாம் பாதுகாப்போம் என்கிறார். இது அவர் கொழும்பில் தெரிவித்துள்ள கருத்து. இது தான் முஸ்லிம் காங்கிரஸ். இவர் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். அவரின் இத்தகைய செயற்பாடுகள் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவை எல்லாமே முற்றிலும் சுய நலம் கருதிய அவரின் சொந்த செயற்பாடுகளே தவிர. இவை முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களும் அல்ல. நிலைப்பாடும் அல்ல. இதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பின் செயற்பாடுகளும் இப்படித் தான். அதுவும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடல்ல. அவர்கள் பௌத்த மதத்தை அவமானப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்த போது துணிச்சலாக நாம் அதை எதிர்த்தோம்;. அவர்கள் பௌத்த மத்தவர்களிடம் மன்னிப்புக் கோர பல வாய்ப்புக்களை ஏற்படுத்தினோம். ஆனால் அதை அவர்கள் பளன்படுத்த தவறிவிட்டனர். கடைசியில் நேற்று நீதி மன்ற உத்தரவின் படி அவர்கள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து மன்னிப்புக் கோர சம்மதித்துள்ளனர். நீதிமன்றம் செல்லாமல் இதை சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் முரண்டு பிடித்தனர். நிதிமன்றத்தில் நான் ஒரு சட்டத்தரணியை பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருந்தேன். உலமா சபையும் ஒரு சட்டத்தரணியை ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் நீதிமன்றத்தில் இந்தக் குழுவினர் பற்றி விரிவான விளக்கத்தையும் தெளிவையும் வழங்கினர். அதன் அடிப்படையில் நீதிபதி மிகவும் ராஜதந்திரமான முறையில் இரு தரப்புக்கும் பாதகமின்றி இந்த விடயத்தை தீர்த்து வைத்துள்ளார். இந்த விடயத்தை பெரிது படுத்தி இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த ஊடக நிஞறுவனங்களையும் நீதிபதி எச்சரித்துள்ளார். அவற்றை உடனடியாக நிறுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். நாம் நேர்மையாக நடந்து கொள்வதால் தான் யார் பிழை செய்தாலும் அதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த துணிச்சல் எமக்கு எப்போதும் உள்ளது.

நாட்டின் ரயில்வே துறைக்கு என்ன நடந்துள்ளது என்று பாருங்கள். ரயில் சாரதியை பயணிகளும் பயணிகளை ரயில்வே ஊழியர்களும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு ரயில்வே துறை சீரழிந்து போய் விட்டது. இதை கவனிக்க எவரும் முன்வருவதாகத் தெரியவில்லை. ரயில் சேவை என்பது இன்று நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. ரயில் பயணிகள் இன்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

பொலிஸ் பேச்சாளர் இன்று அரசுக்கு வக்காளத்து வாங்கும் ஒருவராக மாறிவிட்டார். வழமையாக அமைச்சர்கள் செய்து வந்த வேலையை இவர் தற்போது தன் பொறுப்பில் எடுத்து முழுமையாக செய்து வருகின்றார். இதனால் என்ன நடந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமான அழகான தோற்றத்துடன் ஜாம்பவானாகக் காணப்பட்ட அவர் தற்போது கலையிழந்து காணப்படுகின்றார். கிட்டத்தட்ட அவரும் தற்போது ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் ஒரு பச்சை  கிளி போல் ஆகிவிட்டார். அவரின் நிலை மிகவும் பரிதாபகரமானதாகிவிட்டது.

ஜனாதிபதிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி ஆலோசனை வழங்க தற்போது புதிய நிபுணத்துவ குழுவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த வேலைகள் புரிவதில்லை என்று நினைக்கின்றேன். இதனால் தான் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தனக்கு ஆரோசனை வழங்க அவர் ஒரு குழுவை நியமிக்க உத்தேசித்துள்ளார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீhகுலைந்துள்ளது என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு விட்டது என்பதை நிரூபிக்க இதை விட வேறு ஆதாரம் என்ன வேண்டியுள்ளது? அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு சரியான முறையில் தனது கடமைகளை நிறைவேற்ற இடமளித்தால் இத்தகைய ஆலோசனை சபைகள் எதுவும் தேவையில்லை. நாட்டில் சட்டமும் ஒழுங்கும் தானாகவே சரியாகிவிடும். சட்டமும் ஒழுங்கும் சரியாக பாரபட்சங்கள் எதுவுமின்றி நிலைநாட்டப்பட்டால் நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போதும் இல்லை என்பதே எனது கருத்தாகும். சமய முரண்பாடுகளைக் கையாள ஏற்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கும் இராவண பலய அமைப்பு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. வெசாக் தினத்துக்கு முன் அந்தப் பொலிஸ் பிரிவை கலைத்துவிட வேண்டும். இல்லையேல் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தவர்கள் தற்போது அதை பொசன் வரை தள்ளிவைத்துள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பொலிஸ் பிரிவுக்கு நான் அளித்த முறைப்பாடுகள் பற்றி விளக்கம் போதாது என்று எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். நான் விரைவில் அவர்கள் கோரும் மேலதிக விளக்கங்கள் மற்றும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவுள்ளேன்.

அமைச்சர் மைத்திரிபால சிரிசேன உலக சுகாதார அமைப்பின் (றுர்ழு) உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று மிகப் பெரிய பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது வெரும் புரளி. நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் மூலம் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. உலக சுகாதார பேரவையின் (றுழசடன ர்நயடவா யுளளநஅடிடல) ஐந்து உப தலைவர்களுள் ஒருவராகத் தான் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரே தவிர றுர்ழு வின் உப தலைவராக அவர் தெரிவு செய்யப்படவில்லை என்று தற்போது அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ஏன் மக்களை இப்படி ஏமாற்ற வேண்டும்?

அரசாங்கம் வழங்குகின்ற முக்கிய பட்டங்களான தேமான்ய தேச கீர்த்தி போன்ற பட்டங்கள் கலாநிதி பட்டங்கள் என்பன எல்லாம் இன்று விலை பொருள்கள் அகிவிட்டன . எல்லாவற்றுக்கும் ஒரு விலை உள்ளது.

பஹ்ரேனில் கலிபா பட்டம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாட மாபெரும் வைபவம் ஒன்றை அமைச்சர் ஒருவர் ஏற்பாடு செய்து வருகின்றார். அதற்காக முஸ்லிம் வர்த்தகர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. பள்ளிவாசல்களை உடைத்தமைக்காக பஹ்ரேன் விருது வழங்கியது. அமைச்சர்கள் அதை பாராட்டி கொண்டாடப் போகின்றார்கள். இதுதான் இன்றைய நிலை.இது மிகவும் நகைச்சுவையான ஒரு விடயம். முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டபோது அவற்றுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட இவர்களுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதிக்கு கிடைத்த கலீபா விருதை கொண்டாட மட்டும் முண்டியடிக்கின்றார்கள். இதுதான் இன்றைய முஸ்லிம் தலைவர்களின்; பரிதாபகரமான நிலை.

காலிமுகத்திடல் கடல் பிரதேசம் இன்று நிரப்பப்பட்டு வருகின்றது.ஆனால் இது தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் பற்றி எந்த விவரமும் வெளிப்படையாக இல்லை. இது ஒரு பாரிய திட்டம் என்பதால் இதன் விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். ஜனாதிபதிதான் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என்பதை நாம் மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் பற்றி தற்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நாம் எதிர்க்கட்சிகளிடம் ஒன்றை தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். பொது வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. தற்போது ஏற்படுத்த வேண்டியது இந்த அரசுக்கு எதிரான பொதுவான எதிரணி மேடை. ஒரே மேடைக்குள் சகல கட்சிகளையும் அமைப்புக்களையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு பொது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யலாம். இல்லையேல் அரசுக்குள் இருந்து ஒரு பிரிவு மகிந்த ராஜபக்ஷதான் பொது வேட்பாளர். அவரை எதிர்த்து நிற்கும் சக்தி எதுவும் இல்லை என்ற ஒரு மாயையே ஏற்படுத்திவிடும்.  அந்த நிலையை நாம் தவிர்க்க வேண்டும். எனவே பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்தும் வரை பொது வேட்பாளர் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது என்று நான் நினைக்கின்றேன்.