கிழக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ள இந்த
தருணம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின்
ஆலோசனைக்கமைவாக நேற்று (21) ஒலுவில் துறைமுகத்திற்கு ஈரானில் இருந்து
முதலீட்டாளர்கள் வருகை தந்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.நசீரின் அழைப்பின் பேரில் ஈரானை தளமாக
கொண்டியங்கும் கஷ்ம் சீமெந்துக் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர்
சித்தீக் முகத்தம், வர்த்தக ஆலோசகர் அஷ்கர் கம்யர் ஆகியோர் ஒலுவில்
துறைமுகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் துறைமுகத்திற்கு
அருகாமையில் சீமெந்துக் கம்பனி ஒன்றினை நிறுவ காணிகள் கொள்வனவு செய்ய
ஆலோசனை நடாத்தினர்.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் துணைத் தவிசாளர் ஏ.எல்.அமனுள்ளா,
பிரதேச சபையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்டப் பொதுப்பணிகள் அமைப்பின்
தலைவருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட
உறுப்பினர் யூ.எம் வாகிட் ஆகியோரும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களை வரவேற்று
பேச்சுவார்த்தை நடாத்தி கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு
தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்றும் இந்த பேச்சு
வார்த்தையின் போது குறிப்பிட்டனர்.



