உலக
கோப்பை 20-20 தொடர் வங்கதேசத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. தற்போது
சூப்பர் 10 சுற்றுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் ஏ
பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் மற்றும் பி பிரிவில்
அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என 8 அணிகள்
மோதி வருகின்றன. இந்நிலையில் அதிரடி சுற்றான சூப்பர் 10 நாளை முதல் ஆரம்பம்
ஆகிறது. இதில், 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல்
இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பி பிரிவில் தகுதி
பெறும் அணி மற்றும் 2வது பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான்,
ஆஸ்திரேலியா, ஏ பிரிவில் தகுதி பெறும் அணியும் இடம் பெற்றுள்ளன. சூப்பர் 10
சுற்றில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகளும் அரை
இறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள்
ஏப்.6ம் தேதி மிர்பூரில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். நாளை
மிர்பூரில் இரவு 7 மணிக்கு நடக்கும் சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில்
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி
ஒளிபரப்பு செய்கிறது. இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளால் கடும்
விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆசிய
கோப்பை என தொடர்ந்து 3 தொடரிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், உலக
கோப்பை 20-20 தொடரில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீட்க வேண்டிய
கட்டாயத்தில் டோனி அன்ட் கோ நெருக்கடியுடன் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய
அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு நாளைய
ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். பயிற்சி ஆட்டத்தில்
இந்திய அணி இலங்கையிடம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்து நடந்த ஆட்டத்தில்
இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இந்த 2 ஆட்டங் களிலும்
தவான், ரோகித் சர்மா, யுவராஜ் சோபிக்கவில்லை. ரெய்னா, கோஹ்லி பயிற்சி
ஆட்டத்தை பயன் படுத்திக்கொண்டனர். நாளைய ஆட்டத்தில் துவக்க ஜோடி மாற்றப்பட
வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மாவிற்கு பதிலாக தவானுடன் ரகானே
களமிறங்கக்கூடும். இது நடக்கும் பட்சத்தில் ரோகித் மிடில் ஆர்டரில்
ஆடுவார். துவக்க ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தால் கோஹ்லி, ரெய்னா,
யுவராஜ், டோனி ஆகியோர் அதிரடியில் மிரட்டலாம். பந்து வீச்சில் ஷமி
நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். ஜடேஜா, அஸ்வின் சுழலில் நெருக்கடி
கொடுத்தால் சவால் தரலாம். பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில்
பலமாகவே உள்ளது. ஷேசாத் நல்ல பார்மில் உள்ளார். முகமது ஹபீஸ், ஷர்ஜில்
கான், கமரன் அக்மல், உமர் அக்மல், அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோரும்
பேட்டிங்கில் வலு சேர்க்கக்கூடியவர்கள். அஜ்மல், அப்ரிடி ஆகியோரின்
சுழலும், ஜூனைத்கான், சோகைல் தன்வீர் ஆகியோரின் இடது கைபந்து வீச்சும்,
உமர்குல்லின் நேர்த்தியான வேகமும் நெருக்கடி தரக்கூடும். முதல் வெற்றியை
பதிவு செய்ய இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தின் கடைசி பந்து
வரை பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.