பெண்கள் உங்களது பிரச்சினைகள் தொடர்பில் எப்போது விழித்தெழுகின்றீர்களோ, எப்போது உங்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றீர்களோ எப்போது உங்களது குடும்பத்தினை உண்மையாக நேசிக்கின்றீர்களோ,என்று நீங்கள் உங்களை வழிப்படுத்திக்கொள்கின்றீர்களோ அன்றுதான் இந்த சமூகத்தில் மாற்றம் வரும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மகளிர் மகா சம்மேளன அங்குரார்ப்பண கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் அதிகளவில் சமூக பிரச்சினைகளாக உள்ளன.அவற்றில் குடும்ப வன்முறை,சிறுவர் துஸ்பிரயோகம்,பாலியல் தொடர்பான பிரச்சினைகள்,இளவயது திருமணம்,இளவயது கர்ப்பம்,பாடசாலைக்கு செல்லாமல் இருந்தல் போன்ற பல பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.
இவை பொதுவாக சமூகப்பிரச்சினையாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சினைகளாக உள்ளன.இந்த பிரச்சினைகள் எவ்வாறு ஆரம்பமாகின்றது,இந்த பிரச்சினை யாரை பாதிக்கின்றது எனப்பார்த்தால் உங்கள் வீடுகளிலேயே இந்தப்பிரச்சினை ஆரம்பமாகின்றது.இதற்கு தீர்வினை வெளியில் தேடமுடியாது.தீர்வுகள் உங்களிடமே உள்ளது.
பாடசாலைக்கு பிள்ளை செல்லவில்லையென்றால் அதற்கு தாய்தான் மிக முக்கிய காரணமாக அமைகின்றார்.இளம் வயது திருமணம் நடைபெறுகின்றது என்றாலும் அதற்கு தாயே காரணமாக இருக்கின்றார்.இளம் வயது கர்ப்பம் தரிக்கின்றது என்றாலும் அதற்கு தாய்தான் காரணமாக இருக்கும்.
சிறுவர் துஸ்பிரயோகம் என்னும்போது ஒரு தாய் தனது பிள்ளையை கவனமாகவும் துஸ்பிரயோகம் தொடர்பான அறிவோடும் வளர்க்கவில்லையோ அந்த நிலையில் அந்தபிள்ளை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்.
இன்று உலகம் பெண்களினாலேயே இங்குகின்றது.பெண்கள் தான் இந்த உலகத்தின் இயக்க சக்தியாக இருக்கின்றார்கள்.பெண்கள் சரியான முறையில் இந்த சமூகத்தில் பல பிரச்சினைகளை தீர்த்துவைக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 200மில்லியன் ரூபா மதுபாவனைக்காக செலவிடப்படுகின்றது.இதனைவிட கணக்கிடமுடியாதளவுக்கு போதைவஸ்து பாவனைகள் இடம்பெறுகின்றன.இவற்றில் கவலைக்குரிய விடயம் இந்த போதைவஸ்து வியாபாரத்தில் பெண்கள் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.பாடசாலை மாணவர்கள் மதுபாவனையில் ஈடுபடுவதாகவும் சில இடங்களில் மதுபாவனையில் பெண்கள் கூட ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இங்கு யார் யாரை திருத்துவது என்ற கேள்வி எழுகின்றது.
நான் இந்த மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளராக வருவதற்கு முன்பாக 54 மதுபானசாலைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தன.நான் கடமையேற்ற பின்னர் எந்த மதுபானசாலைக்கும் அனுமதியளிக்கவில்லை.ஆனால் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்குரிய அதிகாரம் எனது கையில் இல்லை.ஏனென்றால் அதனை மூடுவதற்குரிய அதிகாரம் மதுவரித்திணைக்களத்துக்கும் அதன் ஆணையாளருக்கும் மட்டுமே உள்ளது.
இங்குகுடிநீர்ப்பிரச்சினை பற்றி கூறப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 வீதமான பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.ஆனால் இவற்றில் 10வீதமான மக்களே தமது வீடுகளுக்கு பெற்று பயன்படுத்துகின்றனர்.அதேபோன்று 90 வீதமான பகுதிகளுக்கு மின்சார வசதிகளை வழங்கியுள்ளோம்.ஆனால் ஏறக்குறைய 60வீதமான மக்கள் மின்சாரத்தினைப்பெறவில்லை.பல மலசலகூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பலவற்றில் வீட்டுப்பொருட்கள் வைத்து பூட்டப்பட்டுள்ளன.
உங்களது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பும்போது அவர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பதை எத்தனைபேர் பார்க்கின்றனர்.இரண்டு வாரங்களுக்கு முன்னர் கச்சேரி வளாகத்துக்குள் விடுமுறை நாளில் மாலை நான்கு மணிக்கு பின்னர் 14 மாணவர்களை எங்களது அதிகாரிகள் பிடித்துள்ளனர்.இவர்களின் எட்டுப்பேர் ஆண்பிள்ளைகள்,ஆறு பேர் பெண் பிள்ளைகள்.இவர்கள் மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையினை சேர்ந்தவர்கள்.இவர்களை அவர்களது அதிபர்களிடம் கையளித்துள்ளோம்.அவர்கள் தனியார் வகுப்பு செல்வதாக கூறிவிட்டுவந்து கச்சேரியில் உள்ள மதில்களுக்கு இடையில் ஒளிந்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
எனது அதிகாரிகள் பல தனியார் வகுப்புகளுக்கு சென்றுபார்த்தபோது ஒவ்வொரு தனியார் வகுப்பிலும் 400 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர்.இந்த நிலை ஏன்.ஆசிரியர்கள் பாடசாலையில் கற்பிக்காவிட்டால் அதனை தட்டிக்கேட்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.
தனியார் வகுப்பு நீங்கள் பிள்ளைகளை அனுப்பும்போது அவர்கள் அங்குதான் செல்கின்றார்களா அல்லது வேறு எங்கும் செல்கின்றார்களா என்பது உங்களுக்கு தெரியுமா?நீங்கள் நடந்துகொள்ளும் விதங்களை சாதகமாகக்கொண்டு மாணவர்கள் இவ்வாறான வழிகளுக்கு செல்கின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்துக்கொண்டு நிற்காவிட்டால் அவற்றினை தீர்க்கமுடியாது.நாங்கள் மட்டும் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியாது.நாங்கள் உதவிசெய்யலாம்.ஆனால் பிரச்சினைகளை நீங்கள்தான் தீர்க்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஆலயங்களில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள்,பணங்கள் இருக்கின்றன.அவற்றினை தனிப்பட்ட ஒரு சிலர் பயன்படுத்தமுனைவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பெண்கள் உங்களது பிரச்சினைகள் தொடர்பில் எப்போது விழித்தெழுகின்றீர்களோ, எப்போது உங்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றீர்களோ எப்போது உங்களது குடும்பத்தினை உண்மையாக நேசிக்கின்றீர்களோ,என்று நீங்கள் உங்களை வழிப்படுத்திக்கொள்கின்றீர்களோ அன்றுதான் இந்த சமூகத்தில் மாற்றம் வரும்
