கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மநாட்டு மண்டபத்தில் இரண்டாவது நாளுக்குரிய நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெறவுள்ளன.
இரண்டாம் நிகழ்வுகள் உலக நாடுகளின் இளைஞர் விவகார அமைச்சர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் ஜெப்ரி ஜெபதர்ஷன் தெரிவித்தார்.
உலக இளைஞர் மாநாட்டிற்காக 158 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் கொழும்பில் எந்தவொரு வீதியும் மூடப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறி்ப்பிட்டார்.
இதேவேளை, வீதிகளின் போக்குவரத்துகளும் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் விசேட தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், உலக இளைஞர் மாநாட்டின் வீதி போக்குவரத்து தொடர்பான பணிகளுக்காக சுமார் 8000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
