இந்தியாவில் ஆபாச இணைய தளங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை முடக்குவதற்க்கு உத்தரவிடுமாறும் கோரி கமலேஷ் வாஸ்வானி என்ற சட்டத்தரணி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்தல் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.சவுஹான் தலைமையிலான நீதிபதிகள் குழாத்தின் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்ச்வானி, ஆபாச இணைய தளங்களை முடக்க இந்தியாவில் போதிய சட்டங்கள் இல்லாததால், இத்தகைய இணைய தளங்கள் பெருகிவிட்டன. நாட்டில் 20 கோடி ஆபாச வீடியோக்கள் இலவசமாக கிடைக்கின்றன என வாதிட்டார்.
அப்போது மத்திய அரசின் பதில் மனுவை, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தாக்கல் செய்தார்.
ஆபாச இணைய தளங்கள் அனைத்தையும் முடக்குவது இயலாத காரியம். ஆபாச தளங்களை முடக்க வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கணனி தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்குரிய மென்பொருளை அதனுடன் விற்பனை செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
